Tuesday, 5 August 2014

குணாதிசயம்

குணாதிசயம்  

தெரிந்தோ  தெரியாமலோ  நிறைய பேருடன் பழகுகிறோம்.  மனிதர்களோடு  பழகுவது  மிருகங்களோடும்  பறவைகளோடும்  பழகுவது போல் அல்ல.   புலி அருகில் சென்றால்  கொன்று விடும்.  தின்றுவிடும் என  தெரியும்.    பூனை  பிராண்டும்.  நாய் கடிக்க சான்ஸ்  அதிகம்.  குரங்கு  கூட்டுக்குள்ளே  இருந்து பார்க்க நல்லது. அது போல்  பறவைகள்  சில.  நம்மோடு  அவை  நெருங்குவதே  இல்லை.   

மனிதர்கள்  அப்படி  இல்லை.  

 எவர் எப்படி  என்று  அறிந்து கொள்ள  ஆறு  அறிவு  போறாது.  பார்ப்பதற்கும், பழகுவதற்கும்  நிறைய  வித்யாசம்  இருக்கிறது.  எடை  போடவே  முடியாது. 

சில மனோ தத்துவ  நிபுணர்கள் நிறைய  ''இது''  போன்றவர்களை  அணுகி  பழகி   நூற்றில்  50க்கு  மேல்  எப்படியான  ஆசாமிகள்  என்று  கணித்து வைத்திருக்கிறார்கள்.  அதை  இன்று  படிக்க நேரிட்டது  எனது  பூர்வ  கர்ம பலன்  ஆகும்.  சுருக்கமாக  சொல்ல  விழைகிறேன்.   இதை படிக்கும்போதே எனக்கு  அருகில்  இருப்பவர்களை  நான்  பார்த்தது   இன்று  காலை பார்த்தது  போல்  இல்லை. 

நாலு  பேர்  உட்கார்ந்து  பேசிக்கொண்டிருக்கும்போது  ஒரு  ஆசாமி  சாதாரண  அறுவை  ஜோக்குக்குகூட  விழுந்து விழுந்து  சிரிக்கிறானா அவன்  உள்ளுக்குள்ளே  தனிமையில்  வாடுபவன்  என்று  அறிந்து கொள்.   

 எப்போது பார்த்தாலும்  கும்பகர்ணனா?  எப்பவுமே  தூக்கம் தானா?   ''இல்லை  கொஞ்சம்  டயர்டு''   ''வேலை  ஜாஸ்தி. '   ஏதோ  அவன்  பதில்  சொன்னாலும்  மனோ தத்துவ  நிபுணர்கள்  அவனை  அளந்து  வைத்திருப்பது     'அவன்  உள்ளூர  ஏதோ  துன்பத்தில்,  துக்கத்தில்  புழுங்குகிறான்.  வெளியே  சொல்லவில்லை''   என்பது  தான்.  

''எங்கே  உங்களை  ரொம்ப நாளாக  காணோம்  ஊரிலே  இல்லையா  என்று  சாதாரணமாக  கேட்டாலும்  ஏதோ  ஒரு  பதிலை  சொல்பமாக  சொல்கிறார்.  பாம்பே  போனேன்,  இல்லை  அங்கிருந்து ஹைதராபாத்,  திடீர்னு  பூனே  மாத்தி மாத்தி  ரொம்ப  ஜோலிகள். சில சமயம்  காபி  டீ  குடிக்க மட்டும்  இல்லை  குளிக்க  கூட  நேரம்  கிடைக்கலே  என்று  வேக வேகமாக  ஏதேதோ  தந்தி பாஷையில்  பேசுகிறாரா  ...  ஜாக்ரதை.  அவர்   சில பல  ரகசியங்களை  முழுங்கிவிட்டு  வெளியே  சொல்ல்லாதவர்   ,  அமுக்கு பூஷணிக்காய்  என்று  புரிந்துகொள்ளவேண்டும்.  

உணர்ச்சிகளை  எதிர்மாறாக  வெளிப்படுத்துபவர்  சிலர்.  எந்த  துக்கம்  வந்தாலும்  மனிஷன்  ஒரு சொட்டு  கண்ணீர்  கூட  வராது. இவர்  ஏதோ  கல்  நெஞ்சு  ஆசாமி  என்று  கருதாதீர்கள்.  ரொம்ப பூஞ்சை  மனசு தான்.  

சாப்பிடும்போது ஒருவர் அதிகமாகவே இலையில்  உணவை  காலி செய்கிறாரா?  மேலும் மேலும்  கேட்டு  இலை  மீண்டும்  துடைத்து விட்டாற்போல்  இருக்கிறதா? பசியால் கண்  பஞ்சடைந்தவரோ?  இல்லை.   அவர்  ''டென்ஸ்''   ஆக  இருக்கிறார்  என்று  அர்த்தம்.  உணர்ச்சிகளை உள்ளே  போட்டு  அமுக்கி  வைத்திருக்கிறார். வெளியிடவில்லை என்று பொருள் என்கிறார்கள் நிபுணர்கள். 

'' அடடா   அப்பிடியா''  என்று ஒன்றுமில்லாததற்கு  கூட  ஒருவர்   கண்ணீர்  வடிக்கிறாரா?  ஓஹோ அவர் ஒரு  அப்பாவி,  மென்மையான  இதயம்,  இரக்க  குணம் கொண்டவர்  என்று  அறிவதற்கு  மனோ தத்துவ நிபுணர் தேவையில்லை.   

  
ஒருவர்  எதற்கெடுத்தாலும்  கோபம் கொள்கிறாரா?  சின்ன விஷயங்களுக்கு  கூட எரிந்து  விழுகிராரர்  என்றால்  பாவம்  அவர்  அன்புக்கு  ஏங்குகிறார்  என்று  அர்த்தமாம். 

நான்  எதற்காக இந்த  விஷயங்களை சொல்கிறேன்  என்றால்  நாம்  ஒரு  தப்பான  உலகத்தில்  இருக்கிறோம்.  யாரோ  சொன்னபடி  எலுமிச்சம்பழ  ரசம்  குடிக்க வேண்டுமானால்   கெமிகல்  பவ்டர்  (லெமன் எஸ்ஸேன்ஸ்) டிராப்  தண்ணிரில்  கலக்கி குடிக்கிறோம்.  ஆனால்  கை கழுவ இளம் வெந்நீரில்  உண்மையான  எலுமிச்சம்பழத்தை  நறுக்கி  போட்டுகொள்கிறோம்.  !  என்ன  பண்பாடு இது?  அதனால்  தான்  அண்டை   அசல் அருகில்  எதிரில்  இருக்கும்  ஆசாமிகள் பற்றி  உஷாராக  தெரிந்துகொள்ள  இது  தேவையாக  இருக்கலாமே என  தோன்றியது

No comments:

Post a Comment